அட்சய திருதியை என்றால் என்ன? Akshaya Tritiya in Tamil

[ad_1] Akshaya Tritiya in Tamil அட்சய திருதியை அட்சய திருதியை என்றால் தங்கம் வாங்கவேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில், அட்சய திருதியை நாளில், தானங்கள் செய்யவேண்டும். இதைத்தான் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. அட்சய திருதியை நாளில், இல்லாதோருக்கு உங்களால் முடிந்த தானம் செய்யுங்கள். தங்கம் வாங்காத, தங்கம் வாங்க முடியாத, மிக உன்னதமான நாளில், தானம் செய்வோம். நாமும் நம் சந்ததியும் குறைவின்றி வாழ்வோம்! சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் வரும் திதி அட்சய திருதியை நன்னாள். மகத்துவம் வாய்ந்த இந்தத் திருநாளன்று எந்த செயலைத் துவங்கினாலும் அது முழுமையாக வெற்றி பெறும் என்பது ஐதீகம். அட்சயம் என்றால் பூரணமானது, நிறைவு மிகுந்தது என்று அர்த்தம். குறையவே குறையாதது என்று பொருள். அதாவது, அழியாத பலன் தரக்கூடியது என்பார்கள். “வளருதல்” என்றும் அர்த்தம் உண்டு. இந்தத் திருநாளில் துவங்கும் நற்காரியங்கள், பன்மடங்கு பலனைப் பெற்றுத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்! பகவான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரருளால் குசேலன் குபேரயோகம் பெற்றதும் இந்த நாளில்தான்! ஆதிசங்கரர் திருமகளைத் துதித்து, கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, ஏழை அந்தணப் பெண்ணுக்கு செல்வ மழையைப் பொழியச் செய்ததும் இந்த நன்னாளில்தான்! கிருத யுகத்தில், ஓர் அட்சய திருதியை தினத்தன்றுதான் பிரம்மா உலகைப் படைத்தார் என்கிறது பிரம்மபுராணம். செல்வத்துக்கு அதிபதியான குபேரன், சங்கநிதி – பதுமநிதி எனும் ஐஸ்வரியக் கலசங்களைப் பெற்ற நாள் அட்சய திருதியை! திருமகளின் எட்டு அவதாரங்களுள் ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் தான்யலட்சுமி தோன்றியது இந்தத் திருநாளில்தான் என்கிறது புராணம்! வனவாசத்தின்போது தவம் மேற்கொண்ட தர்மருக்கு திருக்காட்சி தந்த சூரிய பகவான், அன்ன வளம் குன்றாத, பெருகிக் கொண்டே இருக்கிற அட்சயப் பாத்திரத்தை அவருக்கு அளித்தார். அதுவும் இப்படியொரு அட்சய திருதியை நாளில்தான்! இந்தப் புண்ணிய நாளில்தான் பரசுராம அவதாரம் நிகழ்ந்தது என்கிறது புராணம். இதைத்தான் ஸ்ரீபரசுராம ஜயந்தி என்று கேரளாவில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அன்னபூரணியான அம்பிகையிடம், பிட்சாடனர் திருக்கோலத்தில் வந்த சிவபெருமான், பிட்சை பெற்ற திருநாளும் இதுதான். இப்படி ஈஸ்வரனுக்கே அமுதளித்த அன்னபூரணிக்கும் மகத்தான அட்சய சக்திகள் கூடின என்கிறது சிவபுராணம். . அட்சய திருதியை நாளில் என்ன செய்யவேண்டும்? தங்கம் வாங்குங்கள் என்று எதிலும் குறிப்பிடவே இல்லை. மாறாக, ஒரு குந்துமணி அளவேனும் தங்கத்தை தானம் வழங்குவது மிகுந்த புண்ணியம் என்கிறது தர்மசாஸ்திரம். அதேபோல், புண்ணியம் நிறைந்த நன்னாளில், முடிந்த வரை தானம் செய்யுங்கள். ஆடை வழங்குங்கள். இயலாதவர்களுக்கு போர்வை வழங்குங்கள். அன்னதானம் செய்யுங்கள். ஒரு ஐந்து பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். உங்கள் வீட்டுக்கு ஐஸ்வர்ய லட்சுமி வருவாள்; ஐஸ்வர்யம் உங்கள் இல்லத்தில் என்றைக்கும் குடியிருக்கும். முக்கியமாக, உப்பு, சர்க்கரை என வெள்ளை நிற பொருட்கள் வாங்குவதும் தானமாகக் கொடுப்பதும் தரித்திரங்களையெல்லாம் போக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். How to Celebrate Akshaya Tritiya in Tamil? அட்சய திருதியை அன்று பின்பற்ற வேண்டியவைகள்: அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப்பியாசம் செய்யும் சடங்கு “அட்சய திருதியை” நாளில் செய்யப்படுகிறது. மகாலட்சுமி திருமால் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள். கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும். மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள். ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும். அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும். அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை” நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள். அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும். அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும். அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும். அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும். அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் “நமசிவாய” மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதிபரமேஸ்வரரின் அருள் கிடைக்கும். அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம். கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள். அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச்சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும். அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை “பிதர்மகடம்” எனப்போற்றுவர். அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது. அட்சய திருதியை நாளில் “பிவசந்த் மாதவாய நம” என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று – தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ்திரத்துக்கு உடன்பாடில்லை. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும். அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும். புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும். ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறு பிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம். மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும். [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/hindu-festival/%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e/?feed_id=3283&_unique_id=675ac9b48dbc4

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான சிறந்த வாஸ்து குறிப்புகள்

பூஜை அறைக்கான வாஸ்து - பூஜை அறைக்கான வாஸ்து குறிப்புகள் மற்றும் அலங்கார யோசனைகள்